சனி, 19 மே, 2018

கூழாங்கற்கள்

🌹என் வலைப்பூவின் முதல் பூ🌹.                 உங்கள் காதலியின் கடிதத்தை படிப்பதைப் போன்ற கவனத்துடன் இதைப் படிப்பீர்கள் என நம்புகின்றேன்.                   இது என் வானம். இங்கு எந்தவித கட்டணங்களோ கடவுச்சீட்டோ இன்றி நீங்கள் சிறகசைத்து பறக்க அனுமதி அளிக்கிறேன். நான் காட்டும் நிலவை யோ, விண்மீன்களையோ நீங்கள் கண்டு இரசிக்கலாம்.
            "எனக்கு ஒரு செய்தி தெரியும்,
உனக்கொரு செய்தி தெரியும், நாம் இருவரும் அதை பகிர்வதால் நாம் இருவரும் இரண்டு செய்திகளை தெரிந்தவர் ஆகிறோம்" என்பதைப் போன்ற தகவல் பகிர்தலாகவும் இருக்ககூடும்.
        கண்ணப்ப நாயனார் உங்களுக்கு தெரியும் தானே.தான் சமைத்த  நிவேதனத்தை தான் முதலில் சுவைத்து சிவனுக்கு படைத்ததைப்போல நான் சுவைத்த விஷயங்களில் சுவையானவற்றை  உங்களுக்கு படைப்பதாகவும் இருக்கலாம்.
வார்த்தைகளால் மனிதர்களை தொடுவது எவ்வளவு அற்புதமான விஷயம். அதற்காக தான் இந்த ஏற்பாடு. 
       கண்ணதாசன் கூறுவது போல "வாய்புரம் தேனை ஊர்புரம் தருவதாகவும் எண்ணலாம்.இது என் கனவுகளின் மொழிபெயர்ப்பு. நீங்கள் என்னுடைய அலைவரிசையில் ஒத்திசைந்தால் என் மனதின் பாடலை கேட்கக்கூடும்.
என் பதிவுகளைக் கொண்டு என்னை யாரும் மதிப்பீடு செய்ய முற்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் யாராக நினைத்தாலும், அது நானில்லை. 
   ஒரு ஊரில் மிகப்பெரிய களிமண்ணால் செய்யப்பட்ட புத்தர் சிலை இருந்தது.ஒருநாள் கனமழை காரணமாக களிமண் கறைய,ஊர்மக்கள் ஒன்றுகூடி சிலை கறையாமல் இருக்க கூறைகளை வேய்ந்தனர்.சுழற்க்காற்றின் காரணமாக கூறைகள் பலனளிக்காமல் போக,தன் இயலாமையின் கைகளை கட்டிக்கொண்டு ஊரே வேடிக்கை பார்க்க, அந்த அதிசயம் நடந்தது. களிமண் கறையக் கறைய தங்கத்தால் ஆன புத்தர்சிலை வெளித்தோன்றியது. உண்மையில் அது தங்கத்தாலான புத்தர் சிலை என்றும், போர்காலங்களில் எதிரிகளிடமிருந்து சிலையை காப்பாற்ற மேலே களிமண் பூசப்பட்டது என்பதை உணர்ந்தனர். என்னுடைய பதிவுகள் உங்களுக்குள் இருக்கும் தங்கத்தை வெளிக்கொணரும் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
    மாறாக இதுவொரு பயணம்.என் விரல் பிடித்து நீங்கள் என்னோடு நடந்து வரலாம். எதற்காக இந்த பயணம் என்று நீங்கள் கேட்கலாம்.பயணம் செய்கின்ற கற்கள் தானே கூழாங்கற்களாக மாறுகின்றன.வாருங்கள் கூழாங்கற்களாக மாறலாம் ....