சனி, 3 ஆகஸ்ட், 2019

பூமியின் பொக்கிஷங்கள்

     பூமியின் பொக்கிஷங்கள்.   
                      வேற்றுகிரக வாசிகள் மூன்று பேர் பூமிக்கு வந்தனர். பூமியில் மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது,பூமியின் பொக்கிஷமாக இருக்க கூடியது எது? என்பதை கண்டுபிடித்து அவற்றுள் ஒன்றை தாம் வாழும் உலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் அவர்கள் வந்த நோக்கம்.

            பணத்தை பார்த்தனர், அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பார்த்தனர், தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பார்த்தனர். எதிலும் திருப்தியடையாமல் சுற்றி வந்தனர்.வழியில் ஒரு நூலகத்தை சென்றடைகின்றனர்.அங்கு வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் பற்றி கேட்டறிந்து அவற்றை பார்க்கின்றனர். பூமியின் பொக்கிஷமாக திகழக்கூடியது புத்தகங்களே என்று கண்கள் மின்ன சொல்லிவிட்டு,புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு தாம் வாழும் உலகத்திற்கு செல்கின்றனர்.

           ஆம் உண்மையில் பூமியின் பொக்கிஷமாக திகழ்வது புத்தகங்கள் தானே!

          மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் தான்.

    தனக்குள் ஒரு மனிதன் இருக்கின்றான்
உலகிலேயே கெடாத பொருள் தேன். தேனீக்கள் சுவைத்ததனால் கெடாத தேன் கிடைப்பது போல.. அறிஞர்கள் தம் சிந்தனையால் சுவைத்த தேன் போன்ற கெடாத சிந்தனைகள் நிரம்பியது தானே புத்தகங்கள்.

   புத்தகங்கள் சொல்கின்றன....
   "தொட்டுப்பார் நான் காகிதம்
     புரட்டிப்பார் நான் ஆயுதம் "
"மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தூக்க மருந்து,
ஊன்றி படிப்பவர்களுக்கு ஊக்க மருந்து"
புத்தகங்கள் படிப்பதனால் 'புத்தகப்புழு' என்பார்களே என்றென்ன வேண்டாம்.
நினைவில் வைத்துக்.     கொள்ளுங்கள்..                               புழுக்கள் தான் வண்ணத்துப்பூச்சிகளாக சிறகடிக்கின்றன...

      ஜப்பானில் ஒருவரின் எடையானது அவர்தாம் படித்த புத்தகங்களின் எடையே குறிக்கின்றன....

காகிதங்கள் இரண்டு இடங்களில் மதிப்புறுகின்றன.
ஒன்று பணமாகும் போது...
மற்றொன்று புத்தமாகும் போது...

புத்தகங்கள் என்னும் ஜன்னலின் வழியாக தான் அறிவு என்ற அகன்ற வானத்தை பார்க்க முடியும்.

எனவே,

நூலே இல்லாமல் நம்மை கட்டிப்போடும் நூலகத்திற்கு வாருங்கள்...

சாபம் பெற்ற அகலிகையாக நூல்கள் இருக்க...
இராமனாக வந்து தொடுங்கள்.

குறிப்பு :-
       
     2.8.19  அன்று ,எங்கள் பள்ளியின் நூலக பொறுப்பாசிரியராக, இறைவணக்க கூட்டத்தில் பேசியது.

திங்கள், 20 மே, 2019

சின்ன விஷயங்களின் மனிதன்

சின்ன விஷயங்களின் மனிதன்.
-------------------------------------------------------
                    மஞ்சள் அரளி பூக்கள் ஒருபுறம்,பத்ராட்சி பூக்கள் மறுபுறமும்,பின்புறம் நித்திய கல்யாணியும் பூத்திருக்கின்ற இடத்தில் உட்கார்ந்து தான் வண்ணதாசனின்"சின்ன விஷயங்களின் மனிதன் "என்கிற புத்தகத்தை வாசிக்க துவங்கினேன். இப்போது யோசித்து பார்த்தால், "நான் ஏன் பூக்கள் நிறைந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன் ?"என்பதற்கு பின்னால் உளவியல் காரணங்கள் இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. அவ்விடத்தில் அமர்வதன் பொருட்டு தனக்குள்ளும் ஓர் மலர்ச்சி ஏற்படும் என்கிற காரணமாக இருக்கலாம்.மலர்ச்சி என்பது மலர்களுக்கு அருகில் அமர்வதாலோ, மழையில் நனைவதாலோ,புத்தகங்களை வாசிப்பதாலோ,பிடித்தமானவருடன் பேசும்போதோ... இப்படி பல விதங்களில் ஏற்படுமெனின்,உலகெங்கிலும் மனிதர்கள் ஏதோ ஒரு மலர்ச்சிக்காக ஏங்குபவர்களாக இருப்பதாகவே தோன்றுகின்றது.
             பொதுவாகவே புத்தகங்களில் பொதுவுடைமையை கடைபிடிப்பவன் நான். நான் வாங்கும் புத்தகங்களில் எதையும் எழுதுபவன் அல்ல, என் பெயரைக்கூட.. அடிக்கோடுகள் கூட இருக்காது. ஆனால் இப்புத்தகத்தில் அப்படி முடியவில்லை.
      " எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனது.... இப்போதும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் "
      "எல்லாவற்றிற்கும் மனம் தான் அளவு,
எல்லாவற்றையும் விட மனம் தான் அழகு"
    ஏனோ இது போன்ற வரிகளை அடிக்கோடிட எண்ணி பேனாவை தேடினேன்.லோகிதாவிற்கும் கீர்த்தனாவிற்கும் கோடை விடுமுறை என்பதால்... எழுதப்பட்டும் எழுதப்படாமலும் இருந்த பேனாக்கள் அனைத்தையும்... சாபம் கொண்ட அகலிகையாக எண்ணி.. சாப விமோசனம் அருளியபடியால் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எழுதுவதற்கு . இறுதியாக கீர்த்தனா தான் ஒரு பேனாவை எடுத்து வந்து தந்தாள். நான் வரிகளை அடிக்கோடிடுவதை கவனித்தவள் ஒலிவாங்கியை (🎤) கையில் வைத்திருப்பவள் போல் என்னிடம் பேட்டி எடுக்க தயாரானாள். பேட்டி பின்வருமாறு...
"வணக்கம் சார்"
"வணக்கம் "
"என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்றீங்களா சார் "
"கேளுடா செல்லம் "
"எதுக்காக இப்படி underline பண்றீங்க சார் "
"இந்தவரிகளெல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு அதனால... "
"Underline பன்னி என்ன பண்ணுவீங்க சார் "
"அப்பப்போ எடுத்து படிச்சு பார்க்க ஈசியா இருக்கும் "
"ஹோ... ஹோ....."
"உனக்கு கூட இதெல்லாம் சொல்லுவேன் "
"ம்ம்ம் "
"எங்கிட்ட படிக்கிற பசங்களுக்கு கூட சொல்லுவேன் "
""அப்போ 'மயிலிறகு குட்டி போட்டது ' கதையை கூட சொன்னீங்களா சார்""
"ஆமாம் டா....சொல்லி இருக்கேன் "
ஒலிவாங்கியை கீழே போட்டவளாக மடியில் அமர்ந்து,என் கழுத்தை சுற்றி தன் கைகளால் கட்டிக்கொண்டு"வைத்தியை நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு பா"என்றாள்...(பொன மாதம் தான் பிரபஞ்சன் எழுதிய "மயிலிறகு குட்டி போட்டது "என்ற கதையை சொல்லி இருந்தேன்.)
சந்தோஷத்தில் பதிலேதும் சொல்ல வராமல் அனைத்து முத்தம் கொடுத்தேன். அது இரண்டு முத்தங்களாக என்னை வந்தடைந்தது.
       வண்ணதாசன் இப்புத்தகத்தின் அணிந்துரையை இப்படி சோல்லி முடித்திருப்பார்.
       "என் வாழ்வு பெரியதும் இல்லை, சிரியதும் இல்லை. நான் பெரிய மனிதனும் இல்லை சிறிய மனிதனும் இல்லை. சின்ன விஷயங்களின் மனிதன். "
நான் கூட அப்படித்தான்.....

நிலா பார்த்தல்

நிலா பார்த்தல்.
--------------------------                                                                             இரவு உணவு முடிந்து... முற்றத்தில் அமர்ந்தோம். பௌர்ணமி நிலவை பார்த்தும் நிலைகொள்ளவில்லை, கீர்த்தனாவிற்கு.
அப்பா... நிலாவைப்பற்றி ஒரு பாட்டு பாடுங்க பா.... என்றாள்.
"நிலா காய்கிறது.... நேரம் தேய்கிறது.... யாரும் இரசிக்கவில்லையே " ....ன்னு நான் பாடியதும் இன்னும் பரவசமானாள். நிலாவைப்பற்றி நான் ஒன்னு சொல்லட்டா பா.?... என்றாள்.
சொல்லும்மா என்ற என் பதிலை எதிர்பார்க்காமலே தொடர்ந்தாள்.
எவ்ளோதான் மேகம் மறைச்சாலும்...அதைத்தாண்டி பிரகாசிக்கிறது தான் பா... நிலா... என்றாள். அடுத்த ஒரு மணிநேரமும் என்னை பேச விடாமல் அவளேதான் பேசினாள்.
எனக்கு ஏனோ நிலாவையே பார்த்துட்டே இருக்கனும் போல இருக்குப்பா.. என்றாள்.
"நிலாவுல... உங்க முகம் தெரியுது பா"
"அப்படியா? "
"அமாம்பா....நம்ம மனசுல யாரு இருக்காங்களோ அவங்கதான் நிலாவுல தெரிவாங்க" என்று அவள் சொல்லும் போது அவள் கண்கள் நட்சத்திரங்களாக மின்னியதை நானறிவேன்.      உங்களுக்கு யாரோட முகம் தெரியுதுனு கேட்டா என்ன சொல்லறதுன்னு யோசிக்கும் போதே.. மீண்டும் தொடர்ந்தாள்
"அப்பா... வானம் முழுவதும் நிலா இருப்பது மாதிரி தெரியுதுபா "என்றாள்.
"நிலாகூட பேசனும் போல இருக்குப்பா !"என்று அடுக்கிக் கொண்டே போனாள்.
"பேசும்மா" என்றேன் நான் .
"ஹாய் நிலா!" என தொடங்கினாள்.
"அப்பா... நிலாவும் எனக்கு ஹாய் சொல்லுதுப்பா" என்கிறாள்.
நிலாவும் சாப்பிட்டாச்சாம்... சாப்பிட்டதும் மேகத்திருந்து நீர் அருந்தியதாக நிலவே சொன்னதாம். இப்படியாக அவள் நினைவுகள் அனைத்திலும் நிலவே நிரம்பி இருந்தது
நேரம் ஆகுது தூங்க போலாமா என்றதும்...                                        "இங்கேயே நிலாவை பார்த்துட்டு இருக்கலாம் பா என்று கெஞ்சி கேட்கிறாள்.                                    காலையில் நிலா இருக்குமா?
"எங்கே இருக்கும்? "
"மேற்கே "
"எத்தனை மணி வரை இருக்கும்? "
"சூரியன் பிரகாசிக்கும் வரை"
"அப்போ காலையில் சீக்கிரம் எழுப்பி விடரிங்களா? "
"சரி டா ..வா தூங்கலாம் "
காலையில் சீக்கிரம் எழுந்தால் எங்களோடு நீங்களும் பார்க்கலாம் நிலவை.?!