பூமியின் பொக்கிஷங்கள்.
வேற்றுகிரக வாசிகள் மூன்று பேர் பூமிக்கு வந்தனர். பூமியில் மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது,பூமியின் பொக்கிஷமாக இருக்க கூடியது எது? என்பதை கண்டுபிடித்து அவற்றுள் ஒன்றை தாம் வாழும் உலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் அவர்கள் வந்த நோக்கம்.
பணத்தை பார்த்தனர், அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பார்த்தனர், தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பார்த்தனர். எதிலும் திருப்தியடையாமல் சுற்றி வந்தனர்.வழியில் ஒரு நூலகத்தை சென்றடைகின்றனர்.அங்கு வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் பற்றி கேட்டறிந்து அவற்றை பார்க்கின்றனர். பூமியின் பொக்கிஷமாக திகழக்கூடியது புத்தகங்களே என்று கண்கள் மின்ன சொல்லிவிட்டு,புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு தாம் வாழும் உலகத்திற்கு செல்கின்றனர்.
ஆம் உண்மையில் பூமியின் பொக்கிஷமாக திகழ்வது புத்தகங்கள் தானே!
மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் தான்.
தனக்குள் ஒரு மனிதன் இருக்கின்றான்
உலகிலேயே கெடாத பொருள் தேன். தேனீக்கள் சுவைத்ததனால் கெடாத தேன் கிடைப்பது போல.. அறிஞர்கள் தம் சிந்தனையால் சுவைத்த தேன் போன்ற கெடாத சிந்தனைகள் நிரம்பியது தானே புத்தகங்கள்.
புத்தகங்கள் சொல்கின்றன....
"தொட்டுப்பார் நான் காகிதம்
புரட்டிப்பார் நான் ஆயுதம் "
"மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தூக்க மருந்து,
ஊன்றி படிப்பவர்களுக்கு ஊக்க மருந்து"
புத்தகங்கள் படிப்பதனால் 'புத்தகப்புழு' என்பார்களே என்றென்ன வேண்டாம்.
நினைவில் வைத்துக். கொள்ளுங்கள்.. புழுக்கள் தான் வண்ணத்துப்பூச்சிகளாக சிறகடிக்கின்றன...
ஜப்பானில் ஒருவரின் எடையானது அவர்தாம் படித்த புத்தகங்களின் எடையே குறிக்கின்றன....
காகிதங்கள் இரண்டு இடங்களில் மதிப்புறுகின்றன.
ஒன்று பணமாகும் போது...
மற்றொன்று புத்தமாகும் போது...
புத்தகங்கள் என்னும் ஜன்னலின் வழியாக தான் அறிவு என்ற அகன்ற வானத்தை பார்க்க முடியும்.
எனவே,
நூலே இல்லாமல் நம்மை கட்டிப்போடும் நூலகத்திற்கு வாருங்கள்...
சாபம் பெற்ற அகலிகையாக நூல்கள் இருக்க...
இராமனாக வந்து தொடுங்கள்.
குறிப்பு :-
2.8.19 அன்று ,எங்கள் பள்ளியின் நூலக பொறுப்பாசிரியராக, இறைவணக்க கூட்டத்தில் பேசியது.