புதன், 8 ஆகஸ்ட், 2018

தாயுமானவன்

     அன்று எட்டாம் வகுப்பு 'அ' பிரிவிற்கு ஆங்கிலப் பாடம். THE MOTHER'S DAY GIFT என்ற கதையை ஆரம்பித்தேன்.                                              "அப்சரா னு ஒரு பெண் இருந்தாளாம்" என்று நான் சொல்ல...
"சார், அப்சரா என்பது பெண் இல்ல சார், அது பென்சில்" னு சுட்டிப் பெண் சுமித்ரா சொல்ல வகுப்பில் ஒரே சிரிப்பு  அலை.
"அப்சரா வும் உங்களைப்போல எட்டாம் வகுப்பு மாணவி தான்.பள்ளியில் அன்று நடந்த வழிபாட்டு கூட்டத்தில் எதிர்வரும் அன்னையர் தினத்தில் அனைத்து மாணவர்களின் அன்னையர் அனைவரும் பள்ளிக்கு அழைத்து வரப்படவேண்டும் என மாணவர்களுக்கு சொல்லப்பட்டது.உடல்முழுவதும் தீயினால் ஏற்பட்ட தழும்புகளை உடைய தம் அன்னையை அழைத்து வந்தால் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளாக நேரிடும் என்று கவலையுடன் வீட்டை அடைந்தாள் அப்சரா. அப்சராவின் கவலையை கேட்டறிந்த அவளின் தாய், தழும்புகள் ஏற்பட்ட காரணத்தை அப்சராவிடம் சொல்ல முற்பட்டார். அப்சரா, கைக்குழந்தையாக இருக்கும் போது அவளை குளிக்க வைக்கும்போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக  ஏற்பட்ட தீ விபத்தில் தன் உயிரை பணயம் வைத்து அப்சராவை காப்பாற்றும்போது ஏற்பட்டது என்றும், அதை நினைத்து ஒருபோதும் தான் வருத்தப்பட்டது இல்லை என்றும் சொல்ல சொல்ல அழுதே விட்டாள் அப்சரா. அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை என்பதை உணர்ந்த அப்சரா,அன்னையர் தினத்தன்று அவளின் அம்மாவை பெருமையோடு அனைவரிடமும் அறிமுகப்படுத்துவதாய் அக்கதை முடியும்.
          ஒவ்வொரு அன்னையும் செய்யும் தியாகங்களை சொல்ல முற்பட்டால் சொற்கள் தீர்ந்து போகும் தானே.
    
      இது எங்கோ நடந்த ஓர் உண்மை சம்பவம். ஒரு காடே பற்றி எரிந்து கொண்டிருந்தது.தொடர் போராட்டத்தால் காட்டுத்தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீயினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக வந்தனர் அதிகாரிகள். அப்போது தான் அந்த ஆச்சர்யத்தை கண்டு உள்ளம் உறைந்து போயினர்.ஒரு தாய் பறவை முற்றிலும் கருகிய நிலையில் நின்றிருந்தது. ஒரு குச்சியால் அதை தட்ட கருகிய சிறகுகள் உதிர்ந்து, உள்ளிருந்து நான்கைந்து குஞ்சுகள் உயிருடன் வெளியே வந்தன தன் உயிரை கொடுத்து தன் குஞ்சுகளை காப்பாற்றிய தாய்மையை தியாகம் என்ற ஒற்றை சொல்லால் உணர்த்திட முடியுமா என்ன?
    இப்படி தாய்மையைப் பற்றி நான் சொல்லும்போதே வகுப்பில் விம்மி விம்மி அழும் குறள் ஒன்று கேட்டது. அழுதது மோகனரூபன் தான். இந்த சிறுவயதிலேயே தாயை இழந்த துயரத்தை,சிறுவயதிலேயே தந்தையை இழந்த என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.தாய்மைக்கான ஏக்கம் கண்ணீராய் வெளிவர, வார்தைகளால் சமாதானம் செய்ய முடியாது என்று உணர்ந்த நான், அவனை என்னோடு அனைத்துக்கொண்டேன். இன்றுமுதல் மோகன ரூபனுக்கு தாயுமானவனாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டதற்கு சாட்சியாக கையில் இருந்த சாக்லேட்டை அவனிடம் கொடுத்து விட்டு வந்தேன்.