மின்சாரமில்லாத ஒரு மழை நாளின் இரவு நேரம் அது.இரவு உணவை கிண்ணத்தில் போட்டு அம்மா உருட்டிக் தந்ததை அனைவரும் உண்டோம். காமாட்சி அம்மன் விளக்கின் மிதமான வெளிச்சத்தில், அம்மா, அக்கா, தம்பி, அப்பா மற்றும் நான் என வரிசையாக படுத்துக்கொண்டோம்.அன்று தான் என்னுடைய இலவச பேருந்து பயண அட்டையை தொலைத்திருந்தேன்.அதைத் தொலைத்த காரணத்திற்காக அப்பாவின் அகலமான கை விரல்கள் முதுகில் பதிய அடியும் வாங்கியிருந்தேன். இந்த மாதிரியான நேரத்தில் தான் ஏலேலசிங்கன் கதையை அப்பா சொல்ல ஆரம்பித்தார். மழையில் முளைப்பது விதை மட்டுமல்ல கதையும் தான். இதோ கதை...
ஒரு நாட்டை ஏலேலசிங்கன் என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவரது அரசவையில் ராஜகுரு ஒருவர் இருந்தார். ஒவ்வொரு நாளும் அவரிடம் அறிவுரைகளை கேட்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தான் அரசன். அன்றும் அரசவை கூடியது. அரசனின் சம்மதத்தோடு ராஜ குரு பேசத்தொடங்கினார். பல்வேறு அறநெறிகளை சொல்லிய குரு "நம்முடையது என இருக்கும் எதுவும் நம்மை விட்டு போகாது" என்ற வரியை அரசனிடம் கூறினார். அரசனுக்கு அவர் சொல்லியதை சோதித்து பார்க்க வேண்டும் எண்ணம் வர.,அரசவையின் ஆஸ்த்தான தலைமை பொற்க்கொல்லனை வரச்சொன்னார். அவனிடம் அரசு கஜானாவில் உள்ள அனைத்து தங்கத்தையும் உருக்கி ஒரேயொரு தங்க கட்டியாக செய்து அதில் அவனது பெயரையும் பொறிக்க உத்தரவிட்டான். தளபதியிடம் அந்த தங்க கட்டியை கொடுத்து அதை நடுக்கடலில் போட உத்தரவிட்டார்.தளபதியும் அவ்வாறே செய்தார். நாட்கள் நகர்ந்தன. சிறிது காலத்திற்கு பிறகு அந்நாட்டின் மீனவன் ஒருவனுக்கு மிகப்பெரிய மீன் ஒன்று வலையில் விழுந்தது. அப்பெரிய மீனை யாரும் வாங்கவில்லை என்று கவலையில் ஆழ்ந்தான் அவன். மற்றுமொறு மீனவ நண்பன் மீனை வாங்க அந்நாட்டு அரசனால் மட்டுமே முடியும் என்று கூற.,மீனை எடுத்துக்கொண்டு அரசனிடம் முறையிட அரசனும் அவனுடைய மீனை வாங்கி அதை சமையல் அறைக்கு அனுப்பி வைத்தார்.மீனை வெட்டியவர்கள் மீனின் வயிற்றில் செவ்வக வடிவ பாசி படிந்த கல் இருப்பதைப் பார்த்து அதை துணிதுவைக்கும் இடத்தில் போட்டனர்.நாளாக நாளாக அந்த கல்லின் மீது இருந்த பாசி மறைய மறைய அந்த கல்லானது தங்கமாக மின்ன அதில் மன்னனின் பெயரும் தெரிய வந்தது. அதை மன்னனிடம் சமர்பிக்க நடந்தவை எல்லாம் புரிந்தது அரசனுக்கு. அன்று ராஜகுரு சொன்னவை உண்மை என அரசன் உணர்ந்தான்.
என்று கதையை அப்பா முடிக்கும் போது கண்ணுக்கு தெரியாத சிறகுகள் எனக்கு முளைத்திருந்ததை என்னை தவிர யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.இப்போது ஏதாவது தொலையும் போது ஏலேலசிங்கன் எட்டிப்பார்த்து போகிறார் தான்.இன்று கீர்த்தனா ஆசைப்பட்டு வாங்கிய மையூற்று பேனா தொலைந்து போனதாக வீட்டுக்கு வந்தது முதல் அழுது கொண்டே இருந்தாள். அவளை அழைத்து ஏலேலசிங்கன் கதையை சொல்லித்தான் சமாதானம் செய்ய முடிந்தது.தொலைந்த பேனா கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கதைகள்தான் நமக்கு அன்பையும் ஆறுதலையும் தந்திருக்கின்றன என்பது உண்மைதானே,!.
ஞாயிறு, 22 ஜூலை, 2018
ஏலேலசிங்கன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Nostalgic and picturesque. Hope more memories bloom from retrospection.
பதிலளிநீக்குMore optimistic towards writing,keep it up
பதிலளிநீக்குமிகச்சிறந்த பதிவு. மேலும் வரைய வாழ்த்துகள்
பதிலளிநீக்கு